ராமஜெயம் கொலை வழக்கில், ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிக்குமாறு திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். ஒரு ரவுடி உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார்.
Advertisment
இந்நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வருகிற 21-ம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், அந்த 12 பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேரும் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் 5 பேருக்கும், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே இதய பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் மனதளவில் சீராக உள்ளனரா என்பது கண்டறியப்படுகிறது. மீதமுள்ள 5 பேருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் ரவுடி செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப் படும்படியாக சிறப்பு புலனாய்வு குழுவினரால் அடையாளம் காணப்பட்ட 13 பேரில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 ரவுடிகள் உடன்பட்ட நிலையில் ஒரு ரவுடி மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு இதன் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நாள் மற்றும் அனுமதியை அனுமதி நீதிபதி 21-ம் தேதி அறிவிப்பார்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"