ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு ஆதரவு கோரி, இரு வேட்பாளர்களும் இன்று சென்னைக்கு வருகின்றனர். பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ரஷ்ய கலாசார மையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடமும் ஆதரவு கேட்க உள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரும் இன்று சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும் அவர், கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.