ரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்வது மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவது குறித்து, தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் இந்த குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த முகாம், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் சந்தேகங்கள் கேட்கலாம். மேலும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது குறித்தும் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.