O Panneerselvam Son Raveendranath MP Name Changed: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி தனது பெயரை முறைப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார். எதற்காக இந்த சென்டிமென்ட்? என்கிற விவாதம் அரசியல் அரங்கில் களை கட்டியிருக்கிறது.
அதிமுக.வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையே முதல்வர் வேட்பாளர் பிரச்னையில் பனிப்போர் மூண்டிருக்கிறது. நடந்து முடிந்த செயற்குழுவில் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அக்டோபர் 7-ம் தேதி இதில் ஒரு முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறி, இப்போதைக்கு பிரச்னையை ஆறப் போட்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் திடீர் பரபரப்பாக ஓ.பன்னீர்செல்வம் மகனும், லோக்சபாவில் அதிமுக-வின் ஒரே எம்.பி.யுமான ரவீந்திரநாத் தனது பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில், ‘எனது முந்தைய பெயர் பி.ரவீந்திரநாத்குமார். 25-08-2020 முதல் அந்தப் பெயரை பி.ரவீந்திரநாத் என மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நியூமராலஜி படி இந்த மாற்றத்தை செய்திருக்கிறேன். எனது ஆவணங்களில் பழைய பெயர் இருக்கும். கெசட்டில் மாற்றம் செய்யவில்லை. எனவே மேற்படி இரு பெயர்களும் என்னையே குறிக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலமாக இனி அரசியலில் முழுமையாக ரவீந்திரநாத் என்கிற பெயரிலேயே இனி ஓ.பி.எஸ் மகன் இயங்குவார் எனத் தெரிகிறது. தனது தந்தையை முதல்வர் ஆக்குவதற்காக இந்த செண்டிமெண்ட் மாற்றமா? இல்லை, தனக்கு மத்திய அமைச்சர் பெறவா? என அரசியல் வட்டாரங்களில் இதை விவாதம் ஆக்குகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"