சென்னை கோயம்பேட்டிலுள்ள லான்சன் டொயோட்டா கார் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனராக இருப்பவர் ரீட்டா லங்காலிங்கம். இவருக்கு வயது ஐம்பது.
இன்று காலை நுங்கம்பாக்கத்திலுள்ள கோத்தாரி சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரீட்டாவின் கணவர் லேன்சன் டொயோட்டா ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் வி முத்துவேல் பாண்டி, "அவருடயை ஊழியர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த பிறகு, நாங்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தோம். அவரது வீட்டில் மூன்று பணியாளர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் இருந்தனர். அவர் படுக்கையறையிலிருந்து வெளியே வர நீண்ட நேரம் பணியாளர்கள் காத்திருந்திருக்கிறார்கள். அவருடைய படுக்கையறையைத் தட்டிய போது, எந்த பதிலும் இல்லாததால், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் தொங்குவதைக் பார்த்திருக்கிறார்கள். அவர் தற்கொலைக்கு திரை துணியைப் பயன்படுத்தினார்," என்று தெரிவித்தார்.
ஐபிசி பிரிவு 174 (இயற்கைக்கு மாறான இறப்பு விசாரணை) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. "தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அறிய விசாரணையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்; இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,”என்று முத்துவேல் மேலும் கூறினார்.