சென்னைக்கு அருகே குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக வீட்டு உரிமையாளருக்கு அஜித் வாடகை கொடுக்க முடியாத சூழலில் இருந்துள்ளார். வாடகை கொடுக்க வேண்டி குணசேகர் சில நாட்களாகவே அஜித்துக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அஜித் வீட்டு உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாடகை விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இளைஞர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24- ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்திவருகின்றன.
தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாதென அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் பொதுநல வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil