புதுச்சேரி கவர்னர் தமிழிசையிடம், வண்ணார் சமூக மக்கள் புதன்கிழமை (பிப்.15) கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “வண்ணார் என்று சாதி சான்றிதழ் அளிப்பதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, ரசகுலத்தோர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வண்ணார் சங்க தலைவர் முத்து, “புதுச்சேரியில் வண்ணார் என்ற இனம் தற்போது எம்.பி.சி பட்டியலில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் பட்டியலின சமூகமாக உள்ளது.
அதேபோல், எங்களையும் பட்டியலின சமூக பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், வண்ணார் என்று அழைப்பதை எங்கள் குழந்தைகள் இழிவாக நினைக்கிறார்கள்.
எனவே எங்களை ரசகுலத்தோர் என்று அழைக்க வேண்டும். அதுவரை எங்களுக்கு எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/