காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை மூன்றும் பின்வருமாறு,
* தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும்.
* உச்சநீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரை குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்தரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை விரைவில் நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்.
என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.