தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50%-லிருந்து 100% வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக குப்பைக்கும் வரி வசூலிக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை 12 லட்சம் பேர் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் பேரில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.540 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப் படுகிறது. இதே போல், மற்ற மாந கராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகளிலும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வருகிறது.
சென்னையில் 1998-க்கு பிறகு சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரியை உயர்த்த பலமுறை பரிந்துரை வழங்கியும் சொத்து வரியில் மாற்றம் செய்யவில்லை. இதனால் 1998-ம் ஆண்டிலிருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்குச் சொத்து வரி 50 விழுக்காடு உயர்த்தியும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு உயர்த்தியும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தி வசூலிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரி உயருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, தமிழக அரசு இந்த புதிய அரசாணையைச் சமர்ப்பிக்கவுள்ளது.