Tamil Nadu Weather: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் இயல்பைக் காட்டிலும் இரண்டில் இருந்து மூன்று அடி உயரத்திற்கு மேல் எழும்புகிறது.
முந்தைய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின் படி, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
வங்கக்கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்காக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் அவர்கள் அறிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து டிசம்பர் 8ஆம் தேதி அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்று மாலை மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இது அடுத்தநாள் (டிசம்பர் 8) காலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் மாலை முதல் அடுத்தநாள் (டிசம்பர் 9) காலை வரை மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் நாளை காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து நாளை மாலை முதல் டிசம்பர் 9ஆம் தேதி மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா பகுதிகள்: டிசம்பர் 8 மாலை முதல் டிசம்பர் 9 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 9ஆம் தேதி மாலை முதல் டிசம்பர் 10 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.