சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளது. இது பாஜக பெற்றுள்ள வாக்குகளை விட அதிகமாகும்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், "ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.