ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு பற்றி திமுக நிர்வாகிகளுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரு நாட்களே(நவம்பர் 27) இருக்கிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் துரித கதியில் வேட்பாளரை முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
திமுக சார்பில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பகுதி செயலாளரான மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் 8 மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க இன்று சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வட சென்னை திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு இதில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த முறை ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், அதற்கு முன்பு ஜெயலலிதாவை எதிர்த்து இதே தொகுதியில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தகவலை இன்று பகல் 11.45 மணிக்கு செய்தியாளர்களிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.