"ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது”, என ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என, ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாக பேசிய ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான்.”, என கூறினார்.
”பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யவில்லையென்றால், நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.”, என கூறினார்.