ரவுடிகள் புடைசூழ, பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, அம்பத்தூர் துணை கமிஷனர் முன்பு சரண் அடைந்தார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பினு. இவர் கடந்த 6ம் தேதி, பூந்தமல்லி அருகில் உள்ள மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள லாரி ஷெட்டில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் லாரி ஷெட்டை சுற்று வைளைத்தனர். துப்பாக்கிமுனையில் 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, போலீசார் வருவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் சேலத்தில் இருப்பதாக தகவல் வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
ரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க போலீசார் தீவிரமாக இருந்தனார். இந்த தகவல் ரவுடி பினுவுக்கும் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் வந்த ரவுடி பினு, துணை கமிஷனரிடம் சரண் அடைந்தார்.
ரவுடி பினு, கேரளாவைச் சேர்ந்தவர். அவருடைய தயார் சென்னை சூளைமேடு பகுதியில் ஆசிரியராக இருந்தார். கராத்தே மாஸ்டராக இருந்த பினு பின்னாளில் ரவுடியாக மாறி, கேங்க்ஸ்டராக உருவாகியிருந்தார். தன்னுடைய கேங்க்குடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி, போலீசில் சிக்கியுள்ளார்.