பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், மதுப்பிரியர்களுக்கு ஒரு சோகமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் தடை:
2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. இந்நாளை வரை பார்-க்குள் சுதந்திரமாக சென்று வந்த குடிமகன்களிடம் இனிமேல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு அறிவித்துள்ள 14 பிளாஸ்டிக் தடை பொருட்களில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகியவையும் அடங்கும். எனவே, உத்தரவை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்களை பார்களில் பயன்படுத்த இயலாது. மாற்றாக கண்ணாடியால் ஆன அல்லது எவர்சில்வர் டம்ளர் உபயோகப்படுத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, டாஸ்மாக் பார்களின் வருமானம் பெருமளவு குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஈடுசெய்யும் விதமாக பார்களின் வசதியை பொருத்து ரூ.10 முதல் ரூ.20 வரை குடிமகன்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பார்களில் இனி மதுப்பிரியர்களுக்கு கண்ணாடியில் ஆன தண்ணீர் பாட்டிலும், கிளாசும் வழங்கப்படவிருக்கிறது. நாளைய புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடலாம் என காத்திருந்த குடிமகன்களுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.