சென்னையைச் சேர்ந்த ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும், கணக்கில் வராத ரூ.5 கோடி பணம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஜேப்பியார் அறக்கட்டளையின் கீழ் செம்மஞ்சேரியில் இயங்கிவரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்தியபாமா கல்லூரி, சூளைமேட்டில் உள்ள பனிமலர் கல்லூரி உள்ளிட்ட 32 இடங்களில், கடந்த நவ.7ம் தேதி முதல் 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.
ஜேப்பியார் கடந்த 1988ம் ஆண்டு கல்வி அறக்கட்டளை தொடங்கினார். தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, சத்யாபாமா மருத்துவ கல்லூரி, ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புனிதமேரி மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பள்ளிகள் என 15 கல்வி நிறுவனங்கள் தொடங்கினார். இதுதவிர, மீன்பிடி துறைமுகம், சிமென்ட் தொழிற்சாலை, பால், மினரல் வாட்டர், இரும்பு தயாரிப்பு தொழிற்சாலை என பல நிறுவனங்கள் தொடங்கினார்.
மேலும் படிக்க - கோவையில் அதிமுக கட்சிக்கொடி கம்பம் சரிந்து விழுந்து பெண் காயம்
இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமாக கணக்கு பராமரித்து பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதபோல், தொழில் நிறுவனங்களிலும் போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
அதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சூளைமேடு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பூந்தமல்லி மற்றும் மீன்பிடி துறைமுகம், சிமென்ட் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை என ஜேப்பியாரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 33 இடங்களில் 133 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு மகள்கள் வீடுகளில் எந்த வித ஆவணங்களும் இன்றி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்புள்ள ரசீது பறிமுதல் செய்யப்பட்டது. ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் செய்தனர். அப்போது, போலி கணக்கு மூலம் ரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.