தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு நேற்று முன்தினம் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடத்திலும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளைப் பொறுத்தவரையில், திமுக 6, காங்கிரஸ் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.
74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டையின் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் மட்டும் அறிவிப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதர 73 இடங்களில் திமுக 68, அதிமுக 1, மதிமுக 2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். 3 ஒன்றியங்களில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் நடைபெறவில்லை.
ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில், ராணிப்பேட்டையின் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள இடங்களில் திமுக - 62, இந்திய தேசிய காங்கிரஸ் - 3, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 1 ஆகிய இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
நாமக்கல்லுக்கான மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடத்தில் திமுகவும், கோயம்புத்தூரில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதே போல பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணிகளே கைபற்றியுள்ளதால் திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil