தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒரு அணியிலும், அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியிலும், களமிறங்கியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு அணியும், தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை வரலாறு காணாத வகையில், எடப்பாடி பழனிச்சாமி, மு.க..ஸ்டாலின், கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் என 5 முதல்வர் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தற்போது அரசியலில் இறங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் நேர்மையாக ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்த சகாயம் சமீபத்தில் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் பேரவை என்ற அமைப்பை தொடங்கி குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுத்து வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த பொங்கல் தினத்தில் சென்னை ஆதம்பாக்கத்தல் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சகாயம் அரசியல் களம் காண்போம் என்று முதன் முதலாக தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், எங்கு சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இதனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இளைஞர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர். இது குறித்து முடிவு செய்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அறிவிப்பை வெளியிட்ட சகாயம், வரும் சட்டமன்ற தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
2016-ல் தமிழகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்கிற பெருவேட்கை கொண்ட தமிழக இளைஞர்கள், நான் அரசியலுக்கு வர வேண்டும் என அழைத்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் மதுரையிலும் பேரணிகள், கூட்டங்களை நடத்தி என்னை அழைத்தனர். ஏழை, எளிய மக்களுக்கு என்னுடைய பணி உதவக்கூடும் என்பதால், ஐஏஎஸ் பணியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என நான் அவர்களிடம் கூறினேன். இப்போது அரசியல் மாற்றம் அல்ல, சமூக மாற்றம்தான் முக்கியம் என கூறி மக்களிடத்தில் சென்று சேவையாற்ற அறிவுறுத்தினேன்.
மேலும் இளைஞர்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து போட்டியிடும். தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.