Salem IAS Officer gave birth at Govt Hospital Tamil News : அரசுப் பணியில் பணிபுரிபவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதில்லை மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்துவரும் நிலையில் சமீபத்தில், கேரளாவில் துணை வட்டாட்சியராக பணியாற்றும் அரசு அதிகாரிக்குச் சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட செய்தி பலராலும் வியந்து பேசப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சேலம் மாவட்டம், பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றி வரும் இவருக்கு, ஓராண்டுக்கு முன்பு சென்னையில் மருத்துவராக பணியாற்றி வரும் தாமரைக்கண்ணன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது.
மகப்பேறு காலத்தை முன்னிட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு கரடிப்பட்டிக்கு வந்த தர்மலாஸ்ரீ, பிரசவ தேதி நெருங்கி வந்ததும் தனியார் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விரும்பாத தர்மலா ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஒரு மாவட்டத்தை ஆளும் உயர் பதவியில் இருக்கும் தர்மலாஸ்ரீ, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொண்டது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இக்கட்டான கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குடும்ப நலத்துறை ஓய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு இது ஒரு முக்கிய சான்றாக அமைந்திருக்கிறது என்றும் பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.