sangita vadyalaya : சென்னையில் உள்ள பழமையான இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1957 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் அரிதான, பழமையான இசை கருவிகளின் அருங்காட்சியமான "சங்கீத வாத்யாலயா"-வை முன்னாள் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பழமையான இசைகருவிகளின் மாதிரிகளை உருவாக்குவது, அவற்றை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசியாவிலே சென்னையில் மட்டும் தான் இசை கருவிகளுக்கான அருங்காட்சியங்கம் உள்ளது. பாரம்பரிய இசை தலைநகரான சென்னையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற கைவிணை பொருட்கள் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், அதுவரை இசை கருவிகள் அருங்காட்சியத்தை டெல்லிக்கு மாற்றுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.