சரத் பிரபு கை மற்றும் கழுத்துப் பகுதியில் சிவப்பு நிற அடையாளம் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சரத் பிரபு, திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்தவர். மருத்துவப் படிப்பு முடித்த இவர் மேற்படிப்புக்காக டெல்லியில் யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக டெல்லியில் தங்கியிருந்து பயின்று வந்த இவர், ஜனவரி 18-ம் தேதி காலை 6 மணியளவில் அங்குள்ள குளியலறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சரத் பிரபு உடல் மீட்கப்பட்ட குளியலறையில் ஊசிகளும், பொட்டாசியம் தொடர்பான மருந்துப் பாட்டிலும் கண்டு பிடிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கிற முடிவுக்கு டெல்லி போலீஸார் வந்தனர். மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு டெல்லி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு சரத் பிரபு உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
சரத் பிரபுவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, இன்று (19-ம் தேதி) இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் சர்வ கட்சியினரும் கலந்து கொண்டனர். சரத் பிரபுவின் உடல் ஊருக்கு எடுத்து வரப்பட்ட பிறகே அவரது கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் சிவப்பு நிறத்தில் காயம் போன்ற அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
சரத் பிரபுவின் உடல்
இது ஊசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட அலர்ஜியா? அல்லது கொலை சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமா? என தெரியவில்லை. இந்த சிவப்பு நிற அடையாளங்களை குறிப்பிட்டு, தனது மகனின் சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என சரத் பிரபுவின் தந்தை செல்வமணி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு இதில் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள்.