Sathankulam case: சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு எஸ்.ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் வழியாக தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை கயத்தாறில் வழிமறித்த சிபிசிஐடி போலீசார், தூத்துக்குடி அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் - மரண வழக்கில் ஏற்கனவே ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
சாத்தான்குளம் விவகாரம் - தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி
சாத்தான்குளம் வழக்கு
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கோவில்பட்டி நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனையும், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமாவையும் விசாரணை நடத்த நியமித்தது.
அதன் பேரில் விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, ‘உன்னால ஒன்னும் ...... முடியாது’ என்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் மகாராஜன் மிரட்டிய சம்பவம், போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம்: சிபிசிஐடி விசாரணை
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், சிபிஐ விசாரணையை தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால், சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும். திருநெல்வேலி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அனில்குமார் உடனே விசாரணை தொடங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி அலுவலகத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். கோவில்பட்டியில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசில், அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மர்ம மரணம் என்று 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அனில்குமார், முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 12 குழுக்கள் களம் இறங்கியது. மொத்தம் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட குழுவினர் பல்வேறு இடங்களிலும் சென்று, ஒரே நேரத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
அதேபோன்று ஒரு குழுவினர், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதற்கிடையே,சி.பி.சி.ஐ.டி. போலீசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நகல், கோவில்பட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து அவர்கள் மாலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் 2-வது நாளாக ஆய்வு நடத்தினர். அங்கு தந்தை-மகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து பதிவு செய்தனர்.
கோவில்பட்டி கிளை சிறையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாலையில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் ஊரடங்கை மீறியதாகவும், செல்போன் கடையை மூடாமல் தகராறு செய்ததாகவும் சாத்தான்குளம் போலீசார் தவறாக வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இன்று காலை மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம்: ஆய்வாளர் ஸ்ரீதர் கைது
இந்த நிலையில் தான் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் வழியாக தப்ப முயன்ற ஸ்ரீதரை வழிமறித்த சிபிசிஐடி போலீசார், தூத்துக்குடி அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பிறகு, அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவ்வளவு சீக்கிரம் தான் கைது செய்யப்படுவோம் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தன் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்த்த ஆய்வாளர் ஸ்ரீதர், தப்பிக்க முயன்ற போது, சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண காவலர்களால் மாஜிஸ்திரேட்டே மிரட்டப்பட்ட சம்பவத்தால், நீதி கிடைக்குமா என்று எதிர்பார்த்த சாத்தான்குளம் மக்களுக்கு, சிபிசிஐடியின் இந்த அதிரடி நடவடிக்கை சற்று நம்பிக்கை அளித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.