Advertisment

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான காவலர் ரேவதி: வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்திரவதையில் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான காவலர் ரேவதி: வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்திரவதையில் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் போலீசார் சித்திரவதையால் தந்தை மகன் உயிரிழந்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள், வனிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இதனால், சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, கோவில்பட்டி நீதித்துறை மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாகவும் நடந்த சம்பவங்களை பெண் தலைமைக் காவலர் ரேவதி பயத்துடன் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு சாட்சியம் அளித்தார். மாஜிஸ்திரேட் விசாரணையின் போது காவலர்கள் அச்சுறுத்தும்படி நடந்துகொண்டதாக பாரதிதாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அதனால், இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ள காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உயர் நிதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்தது. ஆனால், அதற்குள் சாட்சிகள், தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் சாத்தான்குளம் சென்று சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து நேற்று, இந்த வழக்கில் முதல் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் திருத்தப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், முத்துராஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான ரேவதிக்கு உரிய பாதுக்காப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் வலுவாக எழுந்தது.

இந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கு தொடர்பான விசாரனை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சமவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சியமான தலைமைக் காவலர் ரேவதிக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். ரேவதி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment