சாத்தான்குளம் தந்தை - மகன் நீதிமன்ற காவலில் மரணமடைந்த விவகாரத்தில், இருவரையும் சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் இயந்திரத்தனமான நடவடிக்கை குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க கோரும் முறையீட்டை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.ப்பி.சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ட்டி.கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்தபோது, காவல்துறையினர் ஆஜர்படுத்தியபோது மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை (ஜூன் 25) வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"