தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்றதாக அரசு கூறினாலும், பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் குரங்கணி காட்டுத் தீ தொடர்பாக, அவர் பேசிய வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், "குரங்கணி காட்டுத் தீ விபத்து மனதிற்கு மிகவும் வேதனையை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இனிமேல், இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகை மேற்கொள்ளும் என நம்புகிறேன். குரங்கணி காட்டுத் தீ இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை ஆராய வேண்டும்" என்று பேசியுள்ளார்.