தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றுதான் எஸ்.பி.ஐ கிளார்க் முதன்மை தேர்வும் நடைபெற உள்ளது. இதனால் இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்வு நாளை மாற்றக் கோரி வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். ஆனாலும் தேர்வு நாள் மாற்றப்படவில்லை.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை எஸ்.பி.ஐ வங்கியின் சென்னை வட்டாரத் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சு.வெங்கடேசன் பேசுகையில், ’தேர்வு அட்டவணையை வங்கி நிர்வாகம் வெளியிட்ட உடனே, நிதியமைச்சகத்திற்கும், வங்கி தலைமை அதிகாரிகளுக்கும் தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி கடிதம் எழுதினேன். ஆனால் தேதியை மாற்றாமல் உள்ளனர்.
அதேபோல் ரம்ஜான் அன்று நிலைக்குழு கூட்டத்தை அறிவிக்கிறார்கள். இது மாணவர்கள், வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, ஆறரை கோடி தமிழர்களின் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனை என்று கூறினார்.
தொடர்ந்து வட்டார தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தெளிவான பதிலை கூறாததால் வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார், இதையறிந்த தொல்.திருமாவளவன் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் ட்வீட்டர் பதிவு;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பதிவில், ’சு. வெங்கடேசன் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில் தொல். திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் இருவரும் இணைந்திருப்பது போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இனியாவது மத்திய அரசு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்வு தேதியை மாற்றிட எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் திமுக எம்.பி. கனிமொழி தன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’எஸ்.பி.ஐ வங்கி எழுத்தர்(Clerk) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், ஜனவரி 15 பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகை நாளில், இப்படியான தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பண்பாட்டு உரிமையோடு, தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் பறித்திடும் செயல் இது. உடனடியாக, எஸ்.பி.ஐ நிர்வாகம் தேர்வு தேதியை மாற்றி, இந்நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் உரிமையை உறுதி செய்திட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.