அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாணையின் போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்தோம். ஆனால் எங்களை வெளியே தள்ளிவிட்டு இபிஎஸ் தரப்பு முடிவுகளை எடுத்தனர்.
இப்போது அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது இபிஎஸ் உள்ளபோது தேர்தலுக்கு என்ன அவசரம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேநேரம், ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறாது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“