Second Airport in Chennai : திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மாநிலங்களவையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் வி.கே. சிங். அதில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கு ஏற்ற நான்கு இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிடுமாறும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளாதாகவும் கூறினார் அவர்.
ஏற்கனவே மாமண்டூர் மற்றும் செய்யூர் முன்மொழியப்பட்ட நிலையில், ஸ்ரீபெரும்புதூர் உட்பட காஞ்சியில் மேலும் இரண்டு இடங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது என்று இந்திய விமான நிலைய ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், மாமண்டூர் மற்றும் காஞ்சியில் பரந்தூர், ஸ்ரீபெரும்புதூர் என நான்கு இடங்கள் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது குறித்து அமைச்சர் பேசிய போது ரூ. 2467 கோடியில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை ஏஏஐ மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு 2018 ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சென்னை விமான நிலையங்களை மேம்படுத்தும் மற்றும் விரிவுப்படுத்தும் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil