”அரசியலுக்கு ரஜினி வந்தால் கடுமையாக நாம் தமிழர் கட்சி எதிர்க்கும்”, என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடுவோம் என தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் வருகைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், தலைவனாக, முதல்வனாக தமிழ்நாட்டை ஆளக்கூடாது. இது மன்னர் ஆட்சி முறை அல்ல. நாங்கள் அடிமையாக இருக்க முடியாது.”, என கூறினார்.
மேலும், ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், அவர் அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் எனவும், சீமான் தெரிவித்தார்.
”ரஜினியின் அரசியல் வருகை ஒரு மாற்றத்தையும் உருவாக்காது. சிஸ்டம் சரியில்லை என்றால் என்ன சரியில்லை? ரஜினி ஏன் தமிழன் என்று சொல்ல வேண்டும். இனத்தை மாற்றிக்கூறி தமிழர்களை ஏமாற்றுகிறார். அவரது பின்னணியில் பாஜக உள்ளது என கருதுகிறேன்”, என சீமான் விமர்சித்தார்.