சீர்காழி அருகே அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.
அழிவின் விளிம்பில் உள்ள அபூர்வ வகை ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரெட்லி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரையில் அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைக்கு நள்ளிரவு நேரங்களில் வந்து முட்டையிட்டு அதனை மணலால் மூடிவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்று விடும்.
அந்த முட்டைகளை மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் சேகரித்து கூழையார், தொடுவாய் மற்றும் வானகிரி பகுதியில் உள்ள மையங்களில் வைத்து குஞ்சு பொறித்ததும் அவற்றை கடலில் விடுவது வழக்கம். இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளில் 32 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்த வனத்துறையினர் அதனை மையத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்.
அந்த முட்டைகளில் இருந்து தற்போது 2,500 ஆமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன. இதில் முதற்கட்டமாக ஆயிரம் குஞ்சுகளை சீர்காழி வனத்துறையினர் இன்று தொடுவாய் கடற்கரையில் விட்டனர்.
ஒரே நேரத்தில் விடப்பட்ட ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி தவழ்ந்து சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிக அளவு ஆமைகள் மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“