மூத்த அரசியல் தலைவரான இரா.செழியன் காலமானார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல் நலமில்லாமல் வேலூரில் தங்கியிருந்தார். அங்கு இன்று அதிகாலை காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1923ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இரா. செழியன் பிறந்தார். திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவிடம் நெருக்கமாக இருந்தார். இவருடைய உடன் பிறந்த சகோதரர் நாவலர் நெடுஞ்செழியன், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்துள்ளார்.
இரா. செழியன், பெரம்பலூர் தொகுதியில் இருந்து 1962ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கும்பகோணம் தொகுதியில் இருந்து 1967 - 1977ம் ஆண்டு வரையில் எம்.பி.யாக இருந்தார். 1978 முதல் 84 வரையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான இரா.செழியன், அவை நடவடிக்கைகள் மரபுகள் குறித்து அனைத்து விபரங்களையும் அறிந்தவர்.
1977ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய அவர், ஜனதா கட்சியில் இணைந்தார். 1988ம் ஆண்டு ஜனதா கட்சி உடைந்தது. விபி.சிங் தலைமையில் உருவான ஜனதா தளம் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தார். இராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக்தளம் கட்சி உருவான போது, அதன் துணை தலைவராக இருந்தார். 2001ம் ஆண்டு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர், வேலூரில் உள்ள விஐடி பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருடைய சேவையை பாராட்டி தமிழக அரசு 2005ம் ஆண்டு பெரியார் விருது வழங்கி கவுரவித்தது.
இரா. செழியன் மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.