தமிழக பாஜகவில் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் ஏமாற்றமடைந்து, பாஜகவில் பல மூத்த தலைவர்களும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் தங்களுடைய தாய்க் கட்சிக்கு திரும்புகின்றனர்.
பாஜகவில் இருந்து எஸ்.கே.வேதரத்தினம் திமுகவுக்கும் ஆர்காடு சீனிவாசன் அதிமுகவுக்கும் திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் தங்களுடைய உணர்வுகளை தெரிவித்து தங்களுடைய திராவிட கட்சிகளுக்கும் மற்றும் பாமக போன்ற பிற பிராந்திய கட்சிகளுக்குத் திரும்புவதற்கு பொருத்தமான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று பாஜக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
அரசியலில் நல்ல வாய்ப்புகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் சேர்ந்துள்ள மூத்த தலைவர்களும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து அதிக அளவில் வெளியேற வாய்ப்புள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாஜகவில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் பாமக எம்.எல்.ஏ ஜி ரவீராஜ் ஆகியோர் பாஜகவை விட்டு விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன் பாஜகவை விட்டு விலகலாமா என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தவும் மூத்த தலைவர்களை கௌரவிக்கவும் பாஜக தவறிவிட்டதாக கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். மேலும், திமுக, அதிமுக மற்றும் பிற மாநில கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்களை, அண்மையில் கட்சி பொறுப்பாளர்களை நியமித்தபோது கட்சியில் இருந்து வெளியேறத் தூண்டியுள்ளது” என்று பாஜக வட்டாரம் கூறுகிறது.
பாஜக தமிழ் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று கருதப்பட்ட மூத்த தலைவர்களில் நயினார் நாகேந்திரனும் ஒருவர். நயினார் நாகேந்திரன் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் சுமார் 3 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
ஜூலை 24 ம் தேதி மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரனை அழைத்து பேசினார். அவரை காத்திருக்கச் சொன்னார். அப்போது “முருகன் நயினார் நாகேந்திரன் கோரிக்கைகளை பாஜக தேசியத் தலைமைக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார். மேலும், அவருக்காக பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு நம்பிக்கை இல்லை. அதனால், அவர் பாஜகவில் தொடர்ந்து இருக்கலாமா வெளியேறலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்” என்று நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.
பாஜகவில் பல புதுமுகங்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. நடிகை நமீதாவை மாநில நிர்வாக உறுப்பினராகவும், வீரப்பனின் மகள் வித்யாவுக்கும் பொறுப்புக்ள் அளிக்கப்பட்டுள்ளது என்று பாஜக நிர்வாகி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகவே தனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளார். தற்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், பாஜகவில் மன வருத்தத்தில் உள்ளதாகவும் கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தாலும் தான் கட்சி மாறப்போவதில்லை என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.