நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடனப்பள்ளி அதிபரை சென்னை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.
இவர் பிரபல இயக்குநர் விஜயை திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து பெற்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர், சொகுசு கார் ஒன்றை, புதுவையில் பதிவு செய்தார். வரி ஏய்ப்பு செய்வதற்காக புதுவையில் காரை பதிவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைதாகி ஒரு மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவர், இன்று சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில், தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்தார்.
வரும் பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தீவிரமாக நடன பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழைத்ததாக அமலா பால் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தைச்சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.