சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை பெற்றவர், பேன்சி கடை அதிபர் ஆவார்!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, பெரும் சமூகத் தீங்காக இருக்கிறது. சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் அகமது ஷாபி. இவர் பட்டினப்பாக்கம் பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கடைக்கு பொருள்கள் வாங்க வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்தது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் மகளிர் போலீஸார் அகமது ஷாபியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா குற்றம்சாட்டப்பட்டுள்ள அகமதுஷாபிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.