சென்னை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுவதாவது:
சென்னை அடுத்த நாவலூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர், காவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தாளம்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று இரவு அவர் அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். பெரும்பாக்கம் - தாளம்பூர் சாலையில் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வாகனத்தில் வந்த வாலிபர்கள் அவர் தலையில் தாக்கியுள்ளனர். நிலை தடுமாறி விழுந்த அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்துள்ளார். உடன் அவரை, இருளான காலியிடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 15 சவரன் நகை, ஐபோன், அவருடைய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். லேசாக மயக்கம் தெளிந்த அவர் சாலை அருகில் தவள்ந்து வந்துள்ளார். மீண்டும் மயங்கி சாலையோரமே காலை வரையில் கிடந்துள்ளார்.
காலையில் அந்த பக்கம் வந்தவர்கள் அந்த பெண்ணின் அலங்கோலமான நிலையை கண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றிய போது, ‘டேய் விடுங்கடா... ஏன் இப்படி பண்ணுறீங்க...’ என ஈன குரலில் புலம்பியிருக்கிறார். இதை கவனித்த போலீஸ்காரர் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை உறுதி செய்தார்.
மருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் சுய நினைவு திரும்பிய பின்னர்தான், சம்பந்தப்பட்ட நபர்கள் அவருக்கு தெரிந்தவர்களா? அல்லது கொள்ளைக்காரகளா? என்பது தெரியும் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.