Tamil Nadu New Chief secretary and Director general of police: தமிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி அகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம், ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலமும் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டது. பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிதித்துறை செயலாளர் சண்முகம், அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். சீருடை ஆணைய டிஐஜியாக உள்ள ஜே.கே. திரிபாதி, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகின. இவர்களது பெயர்கள், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எந்நேரத்திலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்ப்பட்டது.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக திரு. ஜே.கே.திரிபாதி; புதிய தலைமைச் செயலாளராக திரு. கே.சண்முகம் ஆகியோர் நியமனம்.
— AIADMK (@AIADMKOfficial) 29 June 2019
இந்நிலையில் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அரசானையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சண்முகத்தின் பின்னணி : சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சண்முகம். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும் இவரே. 1985ம் ஆண்டில் தஞ்சாவூரில் பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப் கலெக்டராக பணியாற்றினார். பின்னர் வணிகவரித்துறை துணை கமிஷனர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், குடிமைப்பொருள் கார்ப்பரேசன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், உணவுத்துறை செயலர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பின் 2010ம் ஆண்டிலிருந்து நிதித்துறை செயலர் பொறுப்பை வகித்து வருகிறார். நிதிச்சிக்கலில் தவித்தபோது தனது நிர்வாகத்திறமையால், ஆட்சியை இக்கட்டிலிருந்து மீட்டுள்ளார். இவரது தலைமையில் 9 பட்ஜெட்டுகள் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ளன.
சண்முகம், தமிழ்நாட்டின் 46வது தலைமைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜே.கே. திரிபாதியின் பின்னணி : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாதி முனைவர் பட்டம் படித்து பேராசிரியராக பணியாற்றி மூன்றாவது முயற்சியிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இவரும் 1985 பேட்சை சேர்ந்தவர் ஆவார். ஸ்காட்லாந்து உள்ளிட்ட 2 நாடுகளின் சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை உயர்அதிகாரி பொறுப்பை வகித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் திறம்பட பணியாற்றிவருகின்றார். டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலத்திற்கு பிறகு புதிய டிஜிபியாக ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.