கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 673 பேர்களை மீட்க இன்று தனிக்கப்பல் ஒன்று ஈரான் புறப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் பொதுமுடக்கம் அறிவித்து முடங்கியுள்ளன. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் இருந்தவர்கள் திரும்ப தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 673 பேர் கொரோனா பொது முடக்கத்தால் ஈரானில் சிக்கித் தவிப்பதாக செய்தி வெளியானது. அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், ஈரானில் சிக்கியுள்ள 673 தமிழக மீனவர்களை மீட்க இன்று தனிக்கப்பல் புறப்பட உள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தாயகம்
கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முதல்வர் பழனிசாமி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக
மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை நேரில் சென்று சந்தித்து அம்மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, ஈரான் நாட்டில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர இன்று (ஜூன் 25) பிரத்தியேக கப்பல் புறப்படவுள்ளது. இக்கப்பல் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 673 மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.