Janardhan Koushik
கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து சித்த மருத்துவ முறை தமிழகத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. சென்னையில் இரண்டு மையங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழக அரசு கொரோனாவுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிப்பதை சென்னையைத் தாண்டி பிற பகுதிகளுக்கும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடன் பேசிய தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், சித்த மருத்துவம் ஒரு கூடுதல் சிகிச்சை என்பதோடு பல தடுப்பு முறைகளில் ஒன்று என்று கூறினார். மேலும், ராதாகிருஷ்ணன் கூறுகையில், “முழு அளவில் கொரோனா தொற்றுநோய் வெளிப்படாதவர்கள் சித்த மருத்துவ சிகிச்சையை அனுபவபூர்வமாகத் தேர்வு செய்கிறார்கள். சென்னையில் உள்ள சித்த மருத்துவ மையங்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுபவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் சித்த மருத்துவ மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
பெருநகர சென்னை மாநாகராட்சியின் தகவல்படி, ஜூலை 8ம் தேதி நிலவரப்படி, ஜவஹர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்தா கோவிட் -19 பராமரிப்பு மையத்தில் மொத்தம் 1,036 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த மையத்தில் 725 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 311 பேர் தற்போது சிகிச்சை பெற்ரு வருகின்றனர்.
இந்த சிகிச்சையில் முன்னணியில் இருப்பவர் டாக்டர் வீரபாபு. இவர் அரசு சான்றிதழ் பெற்ற சித்த மருத்துவர். இவர் ஒவ்வொரு நோயாளியும் வெவ்வேறு அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று கூறுகிறார். இது குறித்து டாக்டர் வீரபாபு கூறுகையில், “அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ள டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்றதல்ல இது. அவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருக்கலாம்; சிலருக்கு தொண்டை வலி இருக்கலாம். சிலருக்கு மூச்சுத் திணறல் இருக்கலாம். எனவே நாங்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படுகிறோம்.
அறிகுறியற்ற நோயாளிகளை நாங்கள் இங்கே அனுமதிக்க மாட்டோம். இங்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் அறிகுறி உள்ளவர்கள். அறிகுறியற்ற நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். எங்களிடம் நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் மற்றும் பிற நோயுற்றவர்களும் உள்ளனர். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் குணமடைகிறார்கள். கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் குணமடைய 10 நாட்களுக்கு மேல் ஆகும்” என்று டாக்டர் வீரபாபு கூறினார்.
சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேத மருத்துவம் ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அல்லது ஆய்வு முடிவுகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுவதைப் பற்றி கேட்டபோது, டாக்டர் வீரபாபு கூறுகையில், இவை இரசாயனங்கள் அல்ல, ஆனால், நோயாளிகளின் உயிரைப் பணயம் வைக்காத இயற்கை மூலிகைகள். “ஜவஹர் பொறியியல் கல்லூரி மையத்தில் இதுவரை ஒரு இறப்பு கூட இலை என்று சித்த மருத்துவம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் வீரபாபு, “இங்கே நோயாளிகள் யோகா, நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலர் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைக்கூட விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு ஆறுதலை அளிக்கிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டால் நாங்கள் அவர்களை ஒரு அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறோம்” என்று கூறினார்.
ஆரம்ப கட்டத்திலேயே இந்த சிகிச்சை தொடங்கப்பட்டதாக தெரிவித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், “நாங்கள் அந்தந்த மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சை அளித்து வருகிறோம்” என்று கூறினார்.
ஜவஹர் கல்லூரி சோதனைக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி கொரோனா சித்த மருத்துவ பராமரிப்பு கூடுதல் வசதிகளை சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.