Advertisment

சிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு

சிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு ஏற்படுத்தியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivaji ganesan memorial opening on october 1, actor prabhu thanks to cm edappadi palaniswami, ops to open sivaji ganesan memorial, actor sivaji ganesan

சிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு ஏற்படுத்தியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார்.

Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதிலேயே ஆயிரம் பிரச்னைகள்! சென்னை அடையாறில் இதற்காக தமிழக அரசு இடம் ஒதுக்கியது. நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டப்போவதாக முதலில் கூறினார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

சிவாஜி சமூக நலப் பேரவையினர் இதற்காக தொடர் போராட்டங்களை நடத்தினர். எனவே அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 26.08.2015 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தற்போது 2.80 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த மணிமண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணியளவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என தமிழக அரசு சார்பில் சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. உலக அளவில் பிரசித்தி பெற்றவரான மாபெரும் தமிழ் நடிகருக்கு கட்டப்பட்ட மணி மண்டபம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் ஜெயகுமாரும், துறை அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜூவும் கலந்துகொண்டால் போதும் என அரசு முடிவெடுத்தது சிவாஜி குடும்பத்தினரையும் அதிர வைத்தது.

இது தொடர்பாக நடிகர் பிரபு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால், அவரே வந்து மணிமண்டபத்தை திறந்திருப்பார். முக்கியத்துவம் இல்லாத வகையில் இந்த விழாவை நடத்துவதும், முதல்வர் இந்த நிகழ்ச்சியை தவிர்ப்பதும் எங்களுக்கு வருத்தம் தருகிறது’ என்றார். அதேபோல சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘அமைச்சர்களை வைத்து மணிமண்டபத்தை திறக்க வேண்டாம். திரையுலக பிரபலத்தை வைத்து திறக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

நடிகை வாகை சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒட்டுமொத்த திரையுலமும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்’ என்றார். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

நடிகர் பிரபு சில தினங்களுக்கு முன்பு, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே முதல்வரும் துணை முதல்வரும் சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘முதல்வரே கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறப்பார்’ என்றார். ஆனால் மாலையில் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ‘முதல்வரும் துணை முதல்வரும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் வெளியூரில் இருக்க வேண்டியிருப்பதால் அமைச்சர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுக்க அரசு மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியதால், இன்று அரசு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழாவுக்கு அமைச்சர் ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியூர் நிகழ்ச்சியில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் அல்லது துணை முதல்வர் பங்கேற்றால் போதுமானது என்பதுதான் சிவாஜி குடும்பத்தினரின் விருப்பமாகவும் இருந்தது. எனவே துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டு திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், நடிகர் பிரபு தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டார். கலைத்துறையின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வரை விழாவில் கலந்துகொண்டு திறந்துவைக்க உத்தரவிட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார்.

இதனால் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. நடிகர் சங்கம் உள்ளிட்ட சினிமாத் துறையினருக்கு முதல்வர் பங்கேற்காதது அதிருப்திதான் என்றாலும், சிவாஜி குடும்பத்தினரே சமரசம் ஆகிவிட்டதால் அனைவரும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment