சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் கலைந்து போகச் சொல்லியும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அமர்ந்திருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த ஆட்சியர் பிரதீப்குமார் தன் காரிலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் சாலையில் நின்று கொண்டு நாம் பேச வேண்டாம், அலுவலகத்திற்குள் செல்லலாம் என விவசாயிகளை அழைத்தார். அதற்கு ஒப்புக்கொண்ட விவசாயிகள் அலுவலகத்திற்குள் செல்ல தயாராகினர். அப்போது மாவட்ட ஆட்சியரை அழைத்து செல்ல அவர் அருகில் அவரின் கார் வந்தது.
ஆனால் ஆட்சியர் பிரதீப் குமார் காரில் ஏறாமல் விவசாயிகளை அழைத்து கொண்டு தானும் சேர்ந்தே தன் அலுவலகத்திற்கு நடந்து சென்றார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/