தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசி விளம்பரம் தேடிக் கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தென் மண்டலத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, “கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து அஸ்ரா கார்க், “பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது. இது தொடர்பாக காவலர்கள் பெட்ரோல் நிலையங்களில் வலியுறுத்தியுள்ளனர்.
விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, “ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டும், வாகன ரோந்தும் நடந்து வருகிறது. முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகளிடம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனைக்கு பின்னர் தமிழ்நாடு, கேரளத்தில் ஆங்காங்கே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil