தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, சில மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் சராசரி அளவை காட்டிலும் குறைவான அளவிற்கே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டும் பொய்த்துப் போய்விட்டன. அதனால் ஏற்பட்ட வறட்சி, கடந்த ஆண்டின் பருவமழை காலம் தொடங்கி இந்த ஆண்டு கோடைக்காலம் வரை நீடித்தது. தற்போதும் நீடித்துக்கொண்டிருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய தொடங்கும் தென்மேற்கு பருவ மழையின் மூலம் அதிகளவு மழைப்பொழிவை இந்தியா பெறுகிறது. இந்தியா பெறும் மழையளவில் சுமார் 70 சதவீத மழை தென்மேற்கு பருவ காலத்தின் போதுதான் கிடைக்கிறது. தென்மேற்கு பருவ மழையின் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாநிலங்கள், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக மழைப்பொழிவை பெறும்.
இந்நிலையில், தெற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அது தற்போது இலங்கையின் தென்பகுதி, மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய துவங்கியுள்ளது. அடுத்த 24 முதல் 48 மணிநேரத்திற்குள், இலங்கை, மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகளில் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வெதர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, மே மாதம் 25ம் தேதியளவிலேயே, இலங்கையின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் மழை பொழிந்திருக்கும். ஆனால், இந்தாண்டு பருவமழை ஒருவாரகாலம் தாமதமாக துவங்கியுள்ளது. அது இன்னும் வலுவடைய சிலகாலம் பிடிக்கும் என்பதால், மழைப்பொழிவு துவங்க இன்னும் 8 முதல் 10 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில், தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் துவங்கியுள்ளன. இன்னும் சில தினங்களில், அங்கு மழை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் கடலோர பகுதிகளில் போதிய மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், உட்புற பகுதிகளில் எதிர்பார்த்த மழை இருப்பது சந்தேகமே... வழக்கமாக அதிக மழை பெறும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும், இம்முறை குறைவான மழையே பெய்யும்.
தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, சில மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் சராசரி அளவை காட்டிலும் குறைவான அளவிற்கே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழையளவு : நீலகிரி, திருச்சி, கடலூர், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் 10 சதவிகிதம் வரை அதிகமாக மழைப்பொழிவு இருக்கும்.
குறைவான மழையளவு : திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவாக மழைப்பொழிவு இருக்கும்.
5 முதல் 10 சதவீதம் வரை குறைவு : கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும், 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைவான மழை இருக்கும்.
10 முதல் 15 சதவீதம் வரை குறைவு : ஈரோடு, கரூர், விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களில், சராசரி மழையளவை விட 10 முதல் 15 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவு இருக்கும்.
15 முதல் 20 சதவீதம் வரை குறைவு : திருப்பூர், தருமபுரி, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் 15.1 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் குறைவாக மழை பொழியும்.
20 முதல் 25 சதவீதம் வரை குறைவு : தூத்துக்குடியில் 20.1 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை மழைக் குறைவாக இருக்கும். அதேபோல்மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவைவிட 10.1 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை குறைவான மழைப்பொழிவு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.