நடிகை ஸ்ரீதேவி மரணம், அவர் தண்ணீரில் விழுந்து மூழ்கியதால் நிகழ்ந்ததாக துபாயில் நடந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.
ஸ்ரீதேவி... தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு பாலிவுட்டை ஆண்ட திரை மகாராணி! பிப்ரவரி 25-ம் தேதி அதிகாலையிலேயே அவரது மரணச் செய்தி கேட்டு, மொத்த உலகமும் அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தது.
ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்... படிக்க ‘க்ளிக்’ செய்யவும்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் நெருங்கிய உறவினர் மொகித் மார்வா இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீதேவி சென்றிருந்தார். அவருடன் கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோரும் சென்றனர். மூத்த மகள் ஜான்வி திரையுலகில் அறிமுகமாக இருக்கும் முதல் படத்தின் ஷூட்டிங் காரணமாக செல்லவில்லை.
ஸ்ரீதேவியும் அவரது குடும்பத்தினரும் துபாயில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது 25-ம் தேதி இரவு 11 மணியளவில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது.
ஸ்ரீதேவியின் உடல் போஸ்ட் மார்டம் மற்றும் சில ஆவண வேலைகள் முடிந்ததும் அவரது உடல் மும்பைக்கு எடுத்து வரப்படுகிறது. இதற்கான அம்பானி குடும்பத்தினருக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள இந்து ஷம் சம்ஷான் பூமி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஸ்ரீதேவியின் இறுதி பயணம் LIVE UPDATES இங்கே தரப்படுகிறது.
இரவு 9.03 : ஸ்ரீதேவியின் உடலை ‘எம்பார்மிங்’ செய்யும் நடைமுறை இன்று நடைபெறாது என்றும், செவ்வாய்க் கிழமை மதியம் நடைபெறலாம் என்றும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனவே ஸ்ரீதேவியின் உடல், செவ்வாய்க் கிழமை மாலை வந்து சேரும் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இரவு 8.50 : ஸ்ரீதேவியுடன் பல படங்கள் இணைந்து நடித்த கமல்ஹாசன், அனில் கபூரின் இல்லத்திற்கு வந்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இரவு 8.00 : போனி கபூரின் நெருங்கிய உறவினர்களான மொகித் மார்வா, அந்தாரா மோட்டிவாலா ஆகியோர் அனில் கபூர் இல்லத்திற்கு வந்தனர். இந்த இளம் தம்பதியரின் திருமணத்திற்காகவே ஸ்ரீதேவி துபாய் சென்றது குறிப்பிடத்தக்கது.
இரவு 7.10 : அனில் கபூர் இல்லத்திற்கு வந்த சமாஜ்வாதி கட்சியின் மாஜி தலைவரான அமர்சிங், ‘அபுதாபி ஷேக் அல் நஹ்யானுடன் பேசினேன். அனைத்து ஃபார்மாலிட்டிகளும் துபாயில் முடிந்துவிட்டன. இன்று நள்ளிரவுக்குள் ஸ்ரீதேவி உடல் இந்தியா வந்துவிடும்’ என தெரிவித்தார்.
இரவு 7.00 : ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறுகையில், ‘உள்ளூர் அதிகாரிகளுடனும் கபூர் குடும்பத்தினருடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம். ஸ்ரீதேவியின் உடலை துரிதமாக அனுப்பி வைக்கும் பணியில் உதவி வருகிறோம்’ என்றார்.
மாலை 6.00 : துபாய் போலீஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘ஸ்ரீதேவி தனது ஹோட்டல் அப்பார்ட்மெண்டில் உள்ள குளியல் தொட்டியில் தவறுதலாக விழுந்து மூழ்கி, சுய நினைவு இழந்து மரணம் அடைந்திருப்பதாக போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கூறுகிறது. வழக்கமான நடைமுறைப்படி, இந்த வழக்கை துபாய் அரசு வழக்கறிஞர் தரப்பிடம் ஒப்படைத்துவிட்டோம்’ என கூறியிருக்கிறது.
மாலை 4.50 : நடிகை ஸ்ரீதேவி மரணம், அவர் தண்ணீரில் விழுந்து மூழ்கியதால் நிகழ்ந்ததாக துபாயில் நடந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது. முன்னதாக அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் போஸ்மார்டம் அறிக்கை, உள்நோக்கம் எதுவும் இல்லாத வகையில் அவர் பாத்ரூமில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்திருப்பதாக கூறுகிறது. இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
மாலை 4.40 : நடிகை ஜெனிலியா டிசோசா, அஞ்சலி செலுத்த ஸ்ரீதேவி வீட்டுக்கு வந்தார்.
மாலை 4.35 : நடிகை ஜெயபிரதாவுடன் அமர் சிங் அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீதேவி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
மாலை 4.30 : நடிகை அமிஷா பட்டேல், அஞ்சலி செலுத்த ஸ்ரீதேவி வீட்டுக்கு வந்துள்ளார்.
மாலை 3.45 : தென் இந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், அஞ்சலி செலுத்துவதற்காக அனில் கபூர் இல்லம் வந்தார்.
மாலை 3.30 : ஸ்ரீதேவியின் உடல் வந்ததும் மும்பை போட் கிளப் பகுதியில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் வைக்கப்படும். அதன்பிறகு பவான் ஹன்ஸ் என்ற இடத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக ஏ.என்.ஐ. செய்திகள் கூறுகின்றன.
மாலை 3.23 : கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சகோதரி அக்ஷரா, தாயார் சரிகா ஆகியோருடன் அனில் கபூர் வீட்டுக்கு வந்தார். ஸ்ரீதேவியின் உடல் முதலில் இங்கு கொண்டு வரப்பட இருப்பதாகவே தகவல்!
பிற்பகல் 2.30 : ஸ்ரீதேவியின் சக நடிகையான ஜெயபிரதா வருகை தந்தார்.
பிற்பகல் 2.25 : நடிகை மாதுரி தீட்சித், அனில் கபூரின் இல்லத்திற்கு வந்தார். 1980-களின் பிற்பகுதியில் பாலிவுட்டில் ஸ்ரீதேவிக்கு போட்டியாக கருதப்பட்டவர் மாதுரி தீட்சித்தான். இருவரது ரசிகர்களுமே அப்போது அந்தப் போட்டி காரணமாக பிரிந்து மோதிக்கொண்டார்கள்.
பிற்பகல் 2.00 : ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கமல்ஹாசன் இன்று மாலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் கட்சி தொடக்க நாளன்று அவரிடம், ‘அப்துல் கலாம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நம்பிக்கை எனக்கு இல்லை’ என்றார். ஆனால் ஏற்கனவே சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் கார் மீது அமர்ந்து அவர் ஊர்வலமாக சென்றது நினைவு கூறத்தக்கது. இந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பகல் 1.40 : ஸ்ரீதேவியின் மாமியாரும், போனி கபூரின் தாயாருமான நிர்மல் தனது மகன் அனில் கபூரின் இல்லத்திற்கு வந்தார்.
பகல் 1.15 : ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பரான மனிஷ் மல்ஹோத்ராவும் அங்கு கலங்கிய கண்களுடன் வந்தார். தென் இந்திய நடிகர் வெங்கடேஷும் வருகை தந்தார்.
பகல் 12.50 : பாலிவுட் பிரபலங்களான ஃபர்கான் அக்தர், தபு, ஹனி இரானி, ஃபாரா கான் உள்ளிட்டோர் போனி கபூரின் சகோதரர் அனில் கபூரின் இல்லத்திற்கு வந்து துக்கம் விசாரித்தார்கள்.
பகல் 12.30 : ஸ்ரீதேவியின் உடல் பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. போலீஸ் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவை தயாராகியிருக்கும் நிலையில், உடலை ‘எம்பார்மிங்’ செய்ய சில மணி நேரங்கள் பிடிக்கும் என தெரிகிறது.
காலை 10.00 : ஸ்ரீதேவியின் உடல் வந்து சேராவிட்டாலும்கூட பாலிவுட் பிரபலங்கள் கபூர் குடும்பத்தினரின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
காலை 9.00 : 2-வது நாளாக இன்றும் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லம் முன்பு ரசிகர்கள் சோகத்துடன் கூடினர்.
காலை 8.30 : ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் வந்து சேரும் நேரத்தைப் பொறுத்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிவாகும்.
காலை 8.00 : ‘ஸ்ரீதேவியின் அகால மரணத்தால் போனி கபூர், ஜான்வி, குஷி ஆகியோரின் குடும்பத்தினரும், அய்யப்பன் (ஸ்ரீதேவியின் தந்தை) குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக’ ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்களது குடும்பம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.