மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் கரைக்கப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி இல்ல திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தபோது, கடந்த 24ம் தேதி நள்ளிரவு திடீரென காலமானார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன்பின், குளியல் தொட்டியில் உணர்வற்ற நிலையில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு பிறகு, ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் கடந்த புதன் கிழமை மும்பை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் அஸ்தி கடந்த வெள்ளிக்கிழமை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் கரைக்கப்பட்டது. அப்போது, அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜானவி கபூர், குஷி கபூர் ஆகியோர் இருந்தனர். அன்றைய தினமே தனி விமானம் மூலம் அவர்கள் மும்பைக்கு திரும்பியதாக சென்னை போலீஸ் தகவல் தெரிவித்தனர்.