Staff members of Tamil Nadu temples to wear uniforms : தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கீழ் இயங்கி வரும் அனைத்து கோவில்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சீருடைகளை வழங்கினார் முதல்வர். அவர்கள் அனைவரும் இனி சீருடையில் ஆலய பணிகளை மேற்கொள்வார்கள். பக்தர்களுக்கு கோவில் பணியாளர்களை அடையாளம் காண உதவும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் மற்றும் இதர கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் 04/01/2022 அன்று துவங்கியது.
முதல்வர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை துவங்கி வைத்து செவ்வாய் கிழமை அன்று 12 கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர கோவில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழகத்தின் ஒரே ஒரு பெண் ஓதுவாரான சுஹாஞ்சனாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். சீருடைகளை பெற்ற 12 நபர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா: ‘’என்னைப்போல் பல பெண்கள் பணிக்கு வர வேண்டும்’’
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் திருக்கோயிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு (Brown) நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கோவில்களில் பணியாற்றும் 52,803 பணியாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil