பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தான் கூறியது உண்மையாகிவிட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட அதிமுக சார்பில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ”அதிமுக அணிகள் இணைப்புக்கு முன் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தேன், ‘தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும்’, என அவர் ஆலோசனை வழங்கினார். அணிகள் இணைப்பில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். அதற்கு அவர், ‘நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும்’ என்றார். ந்ன் உடன் இருந்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இதே வேண்டுகோளையே வைத்தனர். அதனால் தான் அணிகள் இணைந்து தற்போது அமைச்சரவையில் உள்ளேன்”, என்றார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதி மாநாட்டில், பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “மோடி கூறியதால் தான் மீண்டும் அதிமுக இணைந்ததாக ஓபிஎஸ் கூறியிருப்பதன் மூலம், பிரதமர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தான் கூறியது உண்மையாகிவிட்டது.”, என கூறினார்.
மேலும், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் தற்போதைய ஆட்சி கவிழ்ந்துவிடும் எனக்கூறிய ஸ்டாலின், எந்நேரத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் எனவும் தெரிவித்தார்.