காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி, உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிப் பெற்றார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசோ தீர்ப்பில் கூறப்பட்டது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, காவிரி மேற்பார்வைக் குழு என்று தெரிவித்து வருகிறது.
தீர்ப்பில் அளிக்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே, முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டு என்று போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம், திமுக சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று முடிவடைந்த நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
காவிரிக்காக திருச்சியில் இருந்து ஆரம்பித்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுனர் மாளிகை வரை காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் ஒரு குழுவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (7-ம் தேதி) திருச்சி முக்கொம்பில் இருந்து புறப்படுகிறார்கள். இன்னொரு குழுவினர் 9-ம் தேதி அரியலூரில் இருந்து புறப்படுவார்கள்.
இந்த நடைபயணத்தை ஸ்டாலின் இன்று(7.4.18) தொடங்குவதற்கு முன்பு, திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர் கருணாநிதியை சந்தித்து ஆசிப் பெற்றார். நேற்றையை தினம், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், அவரிடம் உரிமை மீட்பு பயணத்தை பற்றி கூறி ஆசிப் பெற்றார்.