காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக ஆளுநரை சந்திக்க ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேட்டி அளித்த போது, "சட்டப் பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தோம். துணைவேந்தர் குறித்து விசாரித்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை தெரிவிக்கவே உங்களை வரவழைத்தேன் என ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பது காலம்கடந்த செயல். மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்வது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பேன் என ஆளுநர் கூறினார்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.