கனமழை தொடர்வதால் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளிக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 29 முதல் சென்னையில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 31-ம் தேதி முதலே சென்னையில் பள்ளிகள் இயங்கவில்லை. இன்று திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட நிலையில் கனமழை தொடர்வதால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பள்ளிகளில் மின் கசிவு ஏதும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது. அரையாண்டு தேர்வு நெருங்கும் நேரம் என்பதால் இன்னும் பாடங்கள் நடத்தி முடிக்காமல் இருக்கிறது. இதனால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதோடு தொடர்ந்து ஒரு வாரமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல சிரமப்படுகிறார்கள்.