சென்னை நகரில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லட்ச தீவு மற்றும் அதையொட்டியுள்ள தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றெழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும், தென்னிந்தியப் பகுதியில் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்ஹ்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்தது. காலை வரையில் மழை நீடித்தது. கோடை காலம் ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இது சென்னைவாசிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.